*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 18, 2015

மே 18 2015 !

பூக்களை
பூக்களே கொன்றதாய்
பூக்களே குற்றம் சாட்ட
இடைநிறுத்தி
முடிவடையா வாசனைகளை
அடைத்துக்கொண்டது காற்று.

துவக்கைத் தூக்கினாலும்
பொத்திப் பொத்திப் பக்குவமாய்
தன் கதிருக்குள் அடைகாக்கும்
நம் சூரியன் பூக்களை.

சூரியகாந்திகளாய்
கார்த்திகைப் பூக்களாய்
வாடா மல்லிகைகளாய்
மண் மணக்கும்
வான்காவின் காவியமாய்.

கடவுள்கள்
நம்மோடு வாழ்தல் வரம்
வாழ்ந்தோம்
வாழ்கிறோம்.

துவக்கில் பூத்த இப்பூக்கள்
வானிலும்
வரப்பிலும்
தரையிலும்
தண்ணீரிலும்.

அக்காக்களாய்
அண்ணாக்களாய்
தம்பிகளாய்
தமிழச்சிகளாய்
கண்ணம்மாக்களாய்
இசைப்பிரியாக்களாய்
பிரசாந்திகளாய்
விபூசிகாக்களாய்
இப் பூசணிப்பூக்கள்
நம் வீட்டுக் கோலங்களில்.

எப்படி...எப்படி...எப்படி அழைக்கலாம்
இப்பூக்களை...

தீயாய் பூ கக்கும்
துவக்குகளை
கூட்டுப் பூக்களை
களை கொல்லும் புழுக்களை
எப்படி அழைக்கலாம் ?

நீந்தலறியாதவன்
வெளியில் நின்று
மீனை அழகென்பான்
தரையின் நீந்துவான்.

நாமோ.....
நீந்தும்
கடல் வேங்கைகளென்போம்.
மிதக்கும் பூக்களை.

தாங்கியே தேங்கியிருக்கிறது
நந்திக்குளம்
நம் தாமரைகளை
அள்ளிக்கொள்வோம்
சுதந்திரப் பூக்களென
ஒருநாள்....ஒருநாள்.

அதுவரை
ரசிக்கப்போவதில்லை
மகரந்தம் தின்னும்
பட்டாம்பூச்சிகளையும்
பிரயோசனமில்லா
எந்தக்
காட்டுப் பூக்களையும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

No comments:

Post a Comment